மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சித் தேர்தலில் போலி ஜாதி சான்றிதழ் அளித்து வெற்றி பெற்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருபவர் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் சஹார் ஷேக். கடந்த சில நாட்களாக அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் ‘நாட் ரிச்சபிள்’ நிலையில் இருந்த இவர், திடீரென மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியைப் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்து அடையாளம் தெரியாதவாறு அங்கிருந்தாலும், அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவைப் பதிவிட்டுச் சிக்கிக் கொண்டுள்ளார். தானே மாநகராட்சித் தேர்தலுக்காக மும்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முறைகேடாக ஜாதி சான்றிதழ் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.

 

குறிப்பாக, மகாராஷ்டிர அரசு முத்திரை இல்லாதது, அதிகாரியின் கையெழுத்து இல்லாதது எனப் பல்வேறு குளறுபடிகள் அந்தச் சான்றிதழில் இருப்பதாகத் தானே வட்டாட்சியர் அலுவலக விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜாதி சான்றிதழ் விவகாரத்தில் இவருடைய தந்தை யூனுஸ் ஷேக் மீதும் எஃப்.ஐ.ஆர்  பதிவு செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், சஹார் ஷேக் மைதானத்தில் ஜாலியாக இருந்த வீடியோ இப்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த முறைகேடு நிரூபிக்கப்பட்டால், அவரது கவுன்சிலர் பதவி உடனடியாகப் பறிக்கப்படுவதுடன், சிறைத் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.