திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செப்டிக் டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. நேற்று அந்த வழியாக சென்ற ஜல்லிக்கட்டு காளை குழிக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி காளையை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து விசாரணையில் அது நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோவில் காளை என்பது தெரியவந்தது. பின்னர் காளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.