சமூக வலைதளங்களில் ஒரு பெண் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அவர் “பாராசிட்டமால் மாத்திரையைப் பயன்படுத்தி துணிகளை துவைத்தால், பிடிவாதமான கறைகள் எளிதாக நீங்கிவிடும்” என்று கூறுகிறார். சோப்பு அல்லது டிடர்ஜென்ட் இல்லாமல், ஒரு வாளி நீரில் பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டு துணிகளை துவைத்தால், அவை பளபளப்பாகவும், வெண்மையாகவும் மாறும் என்கிறார்.

மஞ்சள் நிறமாக மாறிய அல்லது அழுக்காக இருக்கும் துணிகளையும் இந்த முறையில் சுத்தம் செய்யலாம் என்று அந்த வீடியோவில் அவர் விளக்குகிறார். இந்த வீடியோவை @acharyaveda என்ற எக்ஸ் பயனர் பதிவிட்டார், இது சில மணி நேரங்களில் வைரலானது. “வெள்ளை துணிகளில் இருந்து அழுக்கை நீக்குவதற்கு எளிய வழி” என்று பதிவிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து, ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து, பகிர்ந்து, கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் வேடிக்கையாக பதிலளித்து வருகின்றனர். ஒருவர், “பாராசிட்டமாலால் துணி துவைத்தால், காய்ச்சல் வந்தால் டிடர்ஜென்ட் சாப்பிட வேண்டுமா?” என்று கிண்டலாக கருத்து பதிவிட்டார். மற்றொருவர், “இனி மருந்து கடைகளில் டிடர்ஜென்டுக்கு பதில் பாராசிட்டமால் மாத்திரைகளை விற்பார்களா?” என்று சிரிப்பாக கேள்வி எழுப்பினார்.

ஆனால், பாராசிட்டமால் மாத்திரைகள் துணிகளில் உள்ள கறைகளை நீக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. பாராசிட்டமால் என்பது காய்ச்சல் மற்றும் வலியை குறைக்க உதவும் மருந்து மட்டுமே, இதில் துணிகளை சுத்தம் செய்யும் எந்த ரசாயன குணமும் இல்லை.

இருப்பினும், இந்த வீடியோவில் உள்ள யோசனை புதுமையாக இருப்பதாகவும், இல்லத்தரசிகளின் சிந்தனைத் திறனை காட்டுவதாகவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன, இவற்றை பின்பற்றுவதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும் என்றும், பாராசிட்டமாலை கைகளால் தொடுவது தோல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.