புனே ஆற்றங்கரையில் இளம் ஜோடி ஒருவர் முத்தமிடுவதைப் புகைப்படமாக எடுத்து, எக்ஸ் பயனர் சாரங் யாதவத்கர், அரசாங்கத்திற்கு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். “இதுதான் புனே ஆர்எஃப் டி புரமனேடு. இதுதான் பாஜக தலைவர்கள் விரும்புவது? இதுதான் ஊழல் அதிகாரிகள் விரும்புவது? இதுதான் புனே மக்கள் விரும்புவது? இதற்காகவா நாம் பணம் செலுத்துகிறோம்?” என அவர் பதிவிட்டார்.

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக அறியப்படும் புனேவில், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, புனேயின் பண்பாட்டை அழிப்பதாகவும், நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திடம் பொறுப்பு கேட்க வேண்டும் எனவும் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம், பொது இடங்களில் நடத்தை மற்றும் புனே மாநகராட்சி (PMC) மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி (PCMC) ஆகியவற்றின் ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டம் (RFD) குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.

புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சிகளின் ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால், புனே மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் எதிர்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டம் ஆறுகளை புத்துயிர் பெறச் செய்யும் என்று நிர்வாகம் உறுதியாக கூறி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு எக்ஸ் தளத்தில் பல பதில்களும் மேற்கோள்களும் வந்துள்ளன. பிம்ப்ரி-சின்ச்வாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரசாந்த் ராவுல், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் PCMC ஆணையர் ஷேகர் சிங் ஆகியோரை டேக் செய்து, “உங்கள் கனவு நனவாகிறது… இது போதை பொருள் பயன்படுத்துவோர், குடிகாரர்களுக்கு ஏற்ற இடம், மற்றும் தொழில்முறை விபச்சாரத்திற்கும் பயன்படலாம்” என கிண்டலாக பதிவிட்டார்.

மற்றொரு எக்ஸ் பயனர், “ஏழை மக்களால் லாட்ஜ் மற்றும் OYO அறைகளின் விலையை தாங்க முடியவில்லை. இதை உணர்ந்து, முன்னாள் மேயராக இருந்த முரளிதர் மொஹோல் இந்த பொது இடத்தை அனுமதித்தார், அதனால்தான் அவர் நாடாளுமன்ற உறுப்பினரானார்” என கேலியாக கருத்து தெரிவித்தார். இந்த சம்பவம், பொது இடங்களில் நடத்தை மற்றும் ஆற்றங்கரை திட்டத்தின் நோக்கம் குறித்து கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது.