சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, திருடர்களுக்கே ‘திருப்புமுனை’யாக அமைந்த ஒரு சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் உள்ள மொபைல் கடை ஒன்றிற்குள், முகத்தை மூடிக்கொண்டு சில நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் நுழைகின்றனர்.

கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு பயந்து அலறியடித்துக்கொண்டு வெளியேறத் தொடங்கினர். திருடர்களும் அவர்களைத் தடுக்காமல் கடையை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஆனால், அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒரு நபர் செய்த காரியம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

கடையை விட்டு வெளியேறிய அந்த நபர், மிகச் சாதுர்யமாக கடையின் ஷட்டரை இழுத்து வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டார். இதனால் கொள்ளையடிக்க வந்த கும்பல் கடைக்குள்ளேயே சிறைபிடிக்கப்பட்டது. ஷட்டரைத் திறக்க அவர்கள் எவ்வளவு முயன்றும் அது பலனளிக்கவில்லை. எக்ஸ்  தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

“திருட வந்த இடத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்” என நெட்டிசன்கள் அந்த நபரின் சமயோசித புத்தியைப் பாராட்டி வருகின்றனர். திருடர்கள் கடைக்குள் சிக்கித் தவிக்கும் இந்தக் காட்சி தற்போது பலரது சிரிப்பலைகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.