ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் உணவகத்தில், 480 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட சீரகச் சாதத்தில் (Jeera Rice) கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்ற சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பயணி ஒருவர் உணவு வாங்கச் சென்றபோது, அங்கே வைக்கப்பட்டிருந்த சாதத்தின் மீது கரப்பான் பூச்சி ஒன்று சுதந்திரமாக உலா வந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார்.

உடனடியாக இதனைத் தனது செல்போனில் வீடியோ எடுத்த அந்தப் பயணி, “480 ரூபாய் கொடுத்து வாங்கும் உணவின் தரம் இதுதானா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உலகத்தரம் வாய்ந்ததாகக் கருதப்படும் சர்வதேச விமான நிலையத்திலேயே இவ்வளவு மோசமான சுகாதாரச் சீர்கேடு நிலவுவதா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“அதிக விலை கொடுத்து உணவை வாங்கும் பயணிகளுக்குப் பாதுகாப்பான உணவைக்கூட வழங்க முடியாதா?” என்றும், “உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள்?” என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபகாலமாகப் புகழ்பெற்ற உணவகங்களில் புழு, பூச்சிகள் கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே வெளியில் சாப்பிடும் நம்பிக்கையை அடியோடு குறைத்துள்ளதாகப் பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.