தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அமலாக்கத்துறையின் உள்நோக்கம் கொண்ட அறிக்கையின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையை தடையை மீறி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி ஊழல் என்று மார்ச் 12 ஆம் தேதி ஊடகங்களின் மூலமாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த பா.ஜ.க.வுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாக, சென்னையில் போராட்டம் நடத்த வேண்டுமென்றால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம் என சில குறிப்பிட்ட இடங்களில் தான் அனுமதி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் ஊர்வலங்களுக்கு கூட சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யபபட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதிக் கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

பிரச்சினைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துவாரா ?தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால், அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சிகளின் காரணமாக அடிக்கடிப் போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.