IPL டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதிக்கொண்டது. டாஸ் வென்ற மும்பை அணியானது முதலில் பேட்டிங் செய்த நிலையில், துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

இதையடுத்து கேமரான் கிரீன், சூர்ய குமார் யாதவ் இருவரும் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதேபோல் திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதன்பின் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு லக்னோ அணியானது களமிறங்கியது.

இதில் அதிகபட்சம் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்த சூழலில், 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட்டானார். அதனை தொடர்ந்து மயேர்ஸ் 18 ரன்களிலும், குருணல் பாண்டியா 8 ரன்களிலும், பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 2 ரன்களிலும், ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனிடையே நவீன் உல் அக் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மோஹ்சின் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணியானது 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக மும்பை அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்று உள்ளது. நேற்று முன்தினம் பிளே ஆப் சுற்றில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை அணி எதிர்த்து விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.