அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியக் குடும்பம் ஒன்று தங்களது புதிய வீட்டின் கிருஹப்பிரவேச விழாவிற்குப் பசுமாட்டினை வீட்டிற்குள் அழைத்து வந்து வழிபாடு செய்த காணொலி, அந்நாட்டு மக்களிடையே கடும் விவாதத்தையும் இனவாதக் கருத்துகளையும் கிளப்பியுள்ளது.

 

டெக்சாஸ் கோசாலை எனும் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலியில், விலை உயர்ந்த பளிங்குத் தரை கொண்ட நவீன வீட்டிற்குள் பசுமாடு அழைத்து வரப்படுவதைக் கண்ட சில அமெரிக்கர்கள், இது பழங்காலத்து அறியாமை என்றும், நவீன அமெரிக்கச் கலாச்சாரத்தோடு இந்தியர்கள் ஒன்றிணைய மறுப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளில் கால்நடைகளைக் கொண்டு வருவது விதிமீறல் என்று ஒரு தரப்பினர் வாதிட, மது விருந்து அளிப்பதைக் காட்டிலும் உயிரினங்களை மதிப்பதே மேன்மையான கலாச்சாரம் என்று இந்தியத் தரப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.