தலைநகர் டெல்லியில் வசித்து வரும் முனாசா என்ற காஷ்மீரி மாணவி, வாடகைக்கு வீடு தேடும் போது தான் எதிர்கொண்ட மதப் பாகுபாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்காக டெல்லி வந்துள்ள அவர், பல இடங்களில் வீடு தேடிய போது தனது அடையாளத்தைக் காரணம் காட்டி பல உரிமையாளர்கள் வீடு தர மறுத்ததாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஒரு வீட்டு உரிமையாளர் ஹிஜாப் அணிவதைக் கைவிட்டால் மட்டுமே வாடகைக்கு வீடு தருவதாகக் கூறியது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரி முஸ்லிம் என்ற அடையாளத்தால் மாணவர்கள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர்.