தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கங்கள் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என கடந்த மே 2ஆம் தேதி முதல் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மாவட்ட அலுவலகங்கள் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தை நடத்துகின்றனர்.

இதனால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நடத்தப்படும் போராட்டத்தால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை எளிய குழந்தைகளின் மதிய உணவு, முட்டை, சத்து மாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருள்கள் வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகளை பாதிக்கக் கூடியதாக உள்ளது என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதனால் மே 2ஆம் தேதி முதல் எந்தெந்த மையங்கள் மூடப்பட்டுள்ளன. முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்களும் பெறப்பட்டு வருகிறது.

இது போன்ற முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு ஏற்கனவே அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறையை அளித்துள்ளது.

இதற்காக முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே சத்துமாவு போன்ற பொருள்கள் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த ஆண்டும் கோடை வெப்பத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மே 11ஆம் தேதி முதல்  மே 25ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர் தொடர்பான பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் போன்ற அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றி தந்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற குழந்தைகளின் நலனுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினை சார்ந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.