ஹைதராபாத்தில் உள்ள கத்கேசர் பகுதியில் உள்ள பிரதாப்சிங்காரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் ஒரு பெரிய பைத்தான் பாம்பு சாலையின் நடுவே ஊர்ந்து செல்லும் வீடியோ வைரலாகும் நிலையில், அந்தக் காட்சிகள் பொதுமக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. பாம்பு வெளியே வந்ததையடுத்து, இரு வழித் தடங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

 

இந்த சம்பவத்தின் வீடியோவில், மக்கள் அந்த பாம்பை சுற்றி நின்று, கல்லால் மற்றும் குச்சி போன்றவற்றால் தாக்க முயற்சிப்பது தெளிவாக காணப்படுகிறது. ஒரு இளைஞர் பெரிய பாறையை தூக்கி பாம்பின் மீது எறிந்து தாக்கியதையும் காணலாம். முதல் முறையில் பாறையை போடும் போது, பாம்பு விலகி சென்றது, ஆனால் பின் மீண்டும் அந்த இளைஞர் பாறையை தூக்கி தாக்க முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் சில வாகன ஓட்டிகள் பாம்பை தவிர்த்து செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மூன்று நாட்களாக அந்த பாம்பு கிராமத்தின் வெளியூர்ப் பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்ததாகவும், இது குறித்து பலமுறை புகார் கூறியதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பாம்பு குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்ததைத் தொடர்ந்து மக்கள் கோபமடைந்து அதனை தாங்களே விரட்ட முயற்சி செய்தனர். பாம்பு உயிருடன் காட்டுக்குள் ஓடிப்போனதா அல்லது கொல்லப்பட்டதா என்பது தொடர்பான உறுதியான தகவல் இல்லை.