சாதனை படைப்பதற்குத் தன்னம்பிக்கை ஒன்றே போதும் என்பதை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பைசான் என்ற மாணவன் உலகிற்கு நிரூபித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பைசான் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

‘செரிப்ரல் பால்சி’ என்ற மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இவரால், தனது கைகளைப் பயன்படுத்திப் பேனாவைக்கூடப் பிடிக்க முடியாது. ஆனாலும் மனம் தளராத பைசான், பேனாவைத் தனது வாயில் கவ்விப் பிடித்துத் தேர்வுகளை எழுதியுள்ளார். சாதாரண மாணவர்கள் கூடக் கடினம் எனக் கருதும் பொதுத்தேர்வில், தனது உடல் ரீதியான சவால்களைத் தகர்த்தெறிந்து அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

 

தனது சாதனை குறித்துப் பேசிய பைசான், “இந்த நோய் மட்டும் எனக்கு ஒரு தடையாக இல்லையென்றால், நான் இன்னும் அதிகமான மதிப்பெண்களை எடுத்திருப்பேன்” எனத் தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். விடாமுயற்சியும், வைராக்கியமும் இருந்தால் எந்தத் தடையையும் தகர்க்கலாம் என்பதற்குப் பைசான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளார். அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.