தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை மற்றும் அவருடைய தாய், தந்தையர் சிலை, முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறன் சிலை ஆகியோருக்கு மாலை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, கடந்த ஆட்சியில் விடியலை நோக்கி பிரச்சாரத்தின் போது இதே இல்லத்தின் முன்பாக நான் கைது செய்யப்பட்டேன். தற்போது இங்கு நான் அமைச்சராக வந்திருக்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் வழியில் நான் மக்கள் பணியாற்றுவேன். பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.