
மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சிலம்பரசன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சிலம்பரசன் மதுரை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
சிலம்பரசன் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கும், அவருடைய மனைவி கவிதாவிற்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிலம்பரசன் வீட்டில் இருந்தபோது அவரிடம் கவிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மனவேதனையடைந்த சிலம்பரசன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
வெகு நேரமாகியும் அவர் வராததால் பதட்டமடைந்த மனைவி உறவினர்களுடன் அவரைத் தேடினார். அப்போது உறவினர்கள், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் தோட்டத்திற்கு சென்றனர். அங்கிருந்த ஒரு அறையை திறந்து பார்த்தபோது சிலம்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிலம்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.