கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பறை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் கச்சிராபாளையம் சாலையில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சென்றபோது முன்னால் சென்ற சைக்கிள் மீது மோதாமல் இருக்க கிருஷ்ணமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அவர் மீது பின்னால் வந்த டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.