ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அதன் பின் மாலை நேரத்தில் மாடுகள் வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில் ராஜு வரவில்லை. வெகுநேரமாகியும் அவர் வராததால் அவருடைய மனைவி, தனது மகனிடம் கூறினார். உடனடியாக அவர் தனது உறவினர்களுடன் ராஜுவை தேடி காட்டிற்கு சென்றார். அங்கு அணைக்கரை பகுதிக்கு அருகே ராஜு ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.