
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என பலர் தினம் தோறும் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி அந்தப் பேருந்தை பல்லடம் பகுதியை சேர்ந்த தாமரைக்கண்ணன் (45) என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும்போதே இரு கைகளையும் ஸ்ட்ரிங்கிலிருந்து எடுத்துவிட்டு தனது செல்போனில் ஹெட்செட்டை மாட்டி க்கொண்டே பேருந்தை ஓட்டினார்.
இதனை கவனித்த பயணி ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வெளியானதை அடுத்து பலரும் ஓட்டுனரின் கவன குறைவை விமர்சித்து வந்தனர்.
தற்போது அந்த வீடியோ போக்குவரத்து துறை பார்வையின் கீழ் வந்ததை அடுத்து திருப்பூர் மண்டல போக்குவரத்து துறை அலுவலக மேலாளர் ஓட்டுநர் தாமரைக் கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார். மேலும் அந்த வீடியோ குறித்து திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.