
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த காரை வழிமறித்தது. பின்னர் லாரியிலிருந்து 5 பேர் கொண்ட கும்பல் இறங்கி காருக்குள் புகுந்து காரில் இருந்த இருவரையும் மிரட்டி 1.25 கிலோ தங்க கட்டிகள், 2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் ரூபாய் 60000 ரொக்க பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசி டிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அந்த கொள்ளை கும்பல் பாதிக்கப்பட்ட இருவரையும் சென்னையிலிருந்து கவனித்து பின்தொடர்ந்து வந்ததாகவும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக பார்த்து திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாகவும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.