தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தன்னுடைய 68-வது படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை சமீப காலமாக தீவிரமாக எடுத்து வருகிறார். அந்த வகையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28-ம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது. மேலும் நடிகர் விஜயின் ஆணையின்படி மதிய உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.