தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பெரிய மொரசுபட்டி பகுதியில் விவசாயியான வேடி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குந்தியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று அதிகாலை வேடி வீட்டிற்கு அருகில் இருக்கும் மாந்தோப்பிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டு யானை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வேடி அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆனாலும் யானை விடாமல் அவரை துரத்தி சென்று தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த வழியாக சென்ற கிராம மக்கள் வேடி இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரும், போலீசாரும் வேடியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.