மதுரை – தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சியினர்கள் வருகை தரும் நிலையில், மாநாடு நடைபெறும் நாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க மதுரை மாவட்ட காவல்துறை சிறப்பு வழித்தட மாற்றங்களை அறிவித்துள்ளது. மாநாட்டுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தனித்தனி வழித்தடங்கள் வழியாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்க்கிங் 1 மற்றும் 1ஏ
குமரி, நெல்லை, தென்காசி மாவட்ட வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டை அடைய வேண்டும். தூத்துக்குடி, விருதுநகர் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாகவும், ராமநாதபுரம் மாவட்ட வாகனங்கள் பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி வழியாகவும் மாநாட்டை அடைய வேண்டும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட வாகனங்கள் சிவகங்கை, திருப்புவனம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக வர வேண்டும். இவை அனைத்தும் பார்க்கிங் 1ல் நிறுத்தப்பட வேண்டும். மேற்குப் பகுதிகளான கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி மாவட்ட வாகனங்கள் திண்டுக்கல், நாகமலைப்புதுக்கோட்டை வழியாக வர வேண்டும். தேனி மாவட்ட வாகனங்கள் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக வர வேண்டும். இவை அனைத்தும் பார்க்கிங் 1ஏல் நிறுத்தப்பட வேண்டும்.
கனரக வாகனங்களுக்கு தனி வழித்தடங்கள்
சென்னை மற்றும் வடக்கு மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி–மணப்பாறை–திண்டுக்கல்–திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும். அதேபோல், மேற்கு மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை நோக்கி செல்லும் வாகனங்கள் திண்டுக்கல்–நத்தம்–கொட்டாம்பட்டி–சிங்கம்புணரி வழியாக பயணிக்க வேண்டும். தேனி மாவட்டத்திலிருந்து வரும் கனரக வாகனங்களுக்கு உசிலம்பட்டி, பேரையூர் வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கவனத்திற்கு
மாநாட்டில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர்கள் இருசக்கர வாகனங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநாடு நடைபெறும் நாளில் அருப்புக்கோட்டை சந்திப்பிலிருந்து பாரபத்தி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, மாற்றுப்பாதைகள் வழியாக செல்ல வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது. மாநாட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், காவல்துறை அறிவித்த வழித்தட மாற்றங்களை பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
