திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது போதையில் இருந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹோமராஜ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.