
சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் செட்டியார் நகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று எண்ணெய் கிடங்கில் இருந்த பேரல்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதற்கிடையே ரசாயன எண்ணெய் வைக்கப்பட்டிருந்த சில பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த எண்ணெய் கிடங்கு அமைக்க உரிய அனுமதி இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.