பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் வடக்கு தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பெருமாள் தனது தோட்டத்தில் மாட்டை கட்டியிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த கதண்டுகள் மாட்டை கடித்தது. இதனால் பெருமாள் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட சென்றார். அப்போது பெருமாளையும் கதண்டுகள் கடித்தது.

இதுகுறித்து பெருமாள் செல்போன் மூலம் தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருமாளின் மகன் ராஜேந்திரன் தனது தந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.