
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குரு முடிதாங்கள் கிராமத்தில் ரேணு(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்திற்கு அருகே வீடு கட்டி விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரேணு மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வர சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பம்ப் செட் அருகே இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால் ரேணு மீது மின் வயர்கள் விழுந்து மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது மின்சாரம் தாக்கி ரேணு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.