ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இடைத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் அ.ம.மு.க வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் ஈரோடு கிழக்கில் போட்டியிடவில்லை. வரும் 2024-ல் கட்டாயம் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு எனக் கூறிய அவர், இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தொண்டர்களே முடிவுசெய்வார்கள் எனவும் தெரிவித்தார்.