இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏறக்குறைய 3,000 கிலோ மீட்டர் பரப்பளவை பாதுகாக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய எல்லை பகுதியில் எல்லைமீறி நுழையும் ஆளில்லா விமானங்களை படையினர் சுட்டு வீழ்த்தி எல்லையில் தீங்கு விளைவிக்கும் செயல்களை முறியடித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்குள் சென்ற டிசம்பர் 25-ம் தேதி இரவு 7 மணியளவில் நாற்கரங்களுடன் கூடிய ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைய முயன்றது.

இதை வீரர்கள் உடனே சுட்டு வீழ்த்தினர். அதன்பின் ரஜதல் கிராமம் அருகில் அதனை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து தடயவியல் ஆய்வுக்கு அந்த ஆளில்லா விமானமானது உட்படுத்தப்பட்டது. பின் ஆய்வில் பாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானம் சென்ற 2022ம் ஆண்டு ஜூன் 11-ல் சீனாவின் பெங் ஜியான் மாவட்டத்தின் மீது பறந்து சென்றது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாகிஸ்தானின் கனேவல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த வருடம் செப்டம்பர் 24-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை தொடர்ந்து 28 முறை பறந்து சென்றதும் தெரியவந்திருக்கிறது. இதை எல்லை பாதுகாப்புப்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. என்ன காரணங்களுக்காக இந்திய வான் பரப்பில் அத்துமீறி அந்த ஆளில்லா விமானம் பறந்து சென்றது எனும் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.