
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் வசித்து வருபவர் சுரேஷ். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு தீபா (36) என்ற மனைவி இருந்துள்ளார். சுரேஷ்- தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை எடுத்தும் வந்துள்ளார். தொடர்ந்து வயிற்று வலி வருவதால் தாங்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் தீபாவை மீட்டு அருகிலுள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் தீபாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.