சென்னை பெருநகர காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை தொடர்பான குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குனர் விக்னேஷ் சிவன் போன்றோர் பங்கேற்றனர். இதையடுத்து விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் இதுவரையிலும் என் படங்களில் குடிப்பது, புகைபிடிப்பது போன்று காட்சிகளை எடுத்ததில்லை.

அதுபோல் காட்சிகள் படங்களில் வைக்கும்போது படம் தொடங்குவதற்கு முன்பு அது தொடர்பாக விழிப்புணர்வு கார்டு போடப்படும். எனினும் என் படங்களில் அது போன்ற கார்டு போடப்பட்டது இல்லை. நானும் ரவுடிதான் திரைப்படம் புதுச்சேரியில் எடுத்தேன். அந்த திரைப்படத்தில் கூட குடிப்பது போன்ற காட்சிகள் எதுவும் வைக்கவில்லை. தன்னால் முடிந்தவரை என் நண்பர்கள், என்னுடைய படத்தில் வரும் ஹீரோக்களை குடிக்க விடாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர் பேசினார்.