சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 28 வயது இளைஞரான ஜீத் ராம் யாதவ், தனது 59 வயது தாய் குலாபியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் குன்குரி காவல் எல்லையில் உள்ள பென்ட்ரர்பத்ரா கிராமத்தில் நிகழ்ந்தது.

கொலையை அரங்கேற்றிய பின்னர், ஜீத் ராம் தனது தாயின் உடலுக்கு அருகில் அமர்ந்து கோபமாக பாடல் பாடியபடி மணலில் விளையாடியதாக அயலவர்கள் தெரிவித்தனர். இந்த காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது, மேலும் இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அயலவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜீத் ராம் கோடாரியை ஏந்தி தாக்க முயன்றதால், அவரை கைது செய்ய சுமார் 4 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.

இருப்பினும் ஜஷ்பூர் காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் சிங், ஜீத் ராமின் மனநிலை கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் பாரம்பரிய மருத்துவர்களிடம் (பைஜாக்கள்) சிகிச்சை பெற்று வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறினார். இந்த வழக்கில் மரணத்திற்கான காரணம் மற்றும் பிற விவரங்களை அறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.