திருச்சியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஜோன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகவுண்டனூர் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது.

இதற்கிடையே டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஜோன் லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.