கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில், ஒரு 25 வயது சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடத்தப்பட்டு, கம்புகளாலும், கால்களாலும் சரமாரியாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உரிமையாளரின் மனைவியுடன் சாதாரணமாகப் பேசிய ஒரு சிறிய வாக்குவாதம் விபரீதமாக மாறியதாலேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரகாஷ் ஹோசமணி என்ற அந்த ஓட்டுநர், யாங்கப்பா சூரி என்பவரிடம் பணிபுரிந்து வந்துள்ளார். உரிமையாளரின் மனைவியுடன் பிரகாஷ் பேசியது சண்டையாக மாற, அந்த ஓட்டுநர் தன்னிடம்  கடுமையாக பேசியதாக உரிமையாளர் யாங்கப்பா சூரி குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சாதாரண பிரச்சினை, ஓட்டுநர் பிரகாஷையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்யும் கொடூரச் செயலாக விபரீதமடைந்தது.

துளசிகேரி மலையிலுள்ள ஒரு தனிமையான இடத்தில் இருவரையும் கொண்டு சென்ற உரிமையாளர் மற்றும் அவரது கூண்டோடு சேர்ந்தவர்கள் ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் அவரது மனைவியின் கைகள், கால்கள் அனைத்தையும் கட்டிப்போட்டு, கம்புகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் காணொளியில், ஒருவர் ஓட்டுநரின் கால்களில் கம்பால் அடிப்பதும், மற்றொருவன் அவரது மனைவியின் முகத்தில் எட்டி உதைப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவரும் கடுமையான காயங்களுக்கு ஆளான நிலையில், இந்தச் சம்பவத்தில் பல நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.