சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சினிமா சண்டை கலைஞரான மணி என்ற டூப் மணி(55) வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார். இவர் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை உள்பட பல்வேறு படங்களில் டூப் போட்டு நடித்துள்ளார். கடந்த 3 நாட்களாக மணியின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மர்மமான முறையில் மணி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் மணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.