அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக வரலாற்று சாதனை படைக்கும். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கு இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த தீர்ப்பினால் அதிமுக தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறினார்.