தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 90 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதுபோக கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் படத்தில் சம்பளப் பிரச்சினை காரணமாக அவர் விலகியதால் அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை அதிதி சங்கர் ஹீரோயினாக கமிட்டாகியிருந்த நிலையில், தற்போது சிம்பு படத்திலிருந்து விலகியதால் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க அதிதி தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி சங்கர் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா குமார் படத்திலும் அவர் கமிட்டாகி இருந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேர தயங்குவதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க அந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே பிரதீப் ரங்கநாதனுடன் சேர்ந்து நடிக்க சம்மதித்த நிலையில், உங்களுக்கு என்னவாம் என்று அதிதியை நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.