அபுதாபியில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் அல் சவுத் சாலையில் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பாக மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பல நாடுகளில் இருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பல பிரிவுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் நாகர்கோயில் சேர்ந்த, அமீரகத்தில் வசிக்கும் லிடியா ஸ்டாலின் மற்றும் விபின் தாஸ் தம்பதியினர் கலந்து கொண்டனர். மாரத்தான் என்றாலே வீரர் மற்றும் வீராங்கனைகள் டி-ஷர்ட், கால் சட்டை அணிந்து ஓடுவது தான் வழக்கம். ஆனால் இந்த தம்பதியினர் வழக்கமாக அணியும் உடைகளை தவிர்த்து விட்டு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவடை தாவணி மற்றும் வேஷ்டி சட்டையை அணிந்து இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மொத்தம் 42.2 கிலோமீட்டர் தொலைவை, இவர்கள் இந்த பாரம்பரிய உடை அணிந்து 4 மணி நேரத்தில் சாதனை படைத்தனர். இவர்களுக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் பதக்கம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, இதுபோன்ற ஓட்ட போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்கள் பாரம்பரியங்களை மறந்து மேற்கத்திய உடைகளை அணிந்து கலந்து கொள்கின்றனர். எனவே தமிழக பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில், இந்த போட்டியில் நமது பாரம்பரிய உடை அணிந்து ஓடினோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.