“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும்! இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும்! மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

முன்னதாக மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளை சார்ந்த மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மீட்பு பணிகளுக்கு தேவையான டீசல் மோட்டார் பம்புசெட்டுகளும், படகுகளும், ஜேசிபி இயந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை புயல் மழையின் தாக்கத்திற்கு பிறகு உடனடியாக களத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர் பெருமக்களும், 50க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இது மட்டுமின்றி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப்  பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையலறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8.12. 2023 வரை 3 வேளை உணவாக மொத்தம் 47 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருகின்றன அவற்றின் விவரம் பின்வருமாறு :

வழங்கப்பட்ட பொருள் :

பால்பவுடர் – 58,222 கிலோ

குடிநீர் பாட்டில்கள் – 9,67,000 எண்ணிக்கை

பிரட் பாக்கெட் – 2,65,000 எண்ணிக்கை

பிஸ்கட் பாக்கெட் – 10,38,175 எண்ணிக்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழை நீர் தற்போது வடிந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (09.12.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் வெள்ள சேதம் குறித்தும் வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 6000 வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண தொகையினை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்,

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13,500 இல் இருந்து ரூபாய் 17000 ஆக உயர்த்தி வழங்கிடவும்;பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 18,000 ரூபாயில் இருந்து ரூபாய் 22,500 ஆக உயர்த்தி வழங்கிடவும்;

மழையினால் பாதிக்கப்பட்ட 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 7,410/-லிருந்து ரூபாய் 8,500/-ஆக உயர்த்திவழங்கிடவும்;

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூபாய் 30,000 என்றிருந்ததை, ரூபாய் 37,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூபாய் 3,000 என்றிருந்ததை, ரூபாய் 4,000/- உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப்  பொருத்தவரையில் முழுமையாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) ரூபாய் 32000/-லிருந்து ரூபாய் 50,000 ஆகவும்; பகுதியாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15,000 ஆகவும் முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானிய தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சம் ஆகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 15,000 ஆக உயர்த்தி வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.