திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலிக்கம்பட்டியில் சோலைமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வசந்தகுமார் வீட்டில் சமைத்த மீன், கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட்டுள்ளார். இரவு நேரத்திலும் அதே உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு படுக்கையறைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரவு 10 மணிக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால் சோலைமலை தனது மகனுக்கு குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் வசந்தகுமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது குளக்கரைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட வசந்தகுமார் நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது குளக்கரை பகுதியில் வசந்தகுமார் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வசந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.