திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யோகேந்திரன் சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தர்மபுரியைச் சேர்ந்த அர்னால்டு என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் நண்பர்களான யோகேந்திரனும், அர்னால்டுவும் வேறு சில நண்பர்களுடன் தென்பெண்ணை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் யோகேந்திரன் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யோகேந்திரனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.