இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். நவராத்திரியின் எட்டாவது நாளான இன்று பால் சாதம் நெய்வேதியமாக வைத்து வழிபடலாம். பால் சாதம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
அரிசி- இரண்டு கப், தேங்காய்-அரை மூடி
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது- கால் ஸ்பூன்
பட்டை-3
லவங்கம்-5
ஏலக்காய்-3 கறி மசாலா பொடி கால் டீஸ்பூன்
முந்திரி-50 கிராம்
நெய்-100 கிராம்
புதினா, கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு.

முதலில் தேங்காயை அரைத்து நான்கு கப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடு ஏறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இதனையடுத்து தேங்காய் பால், கரிமசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த கலவை நன்கு கொதித்ததும் அரிசியை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் போட்டு பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும். இதனையடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலையை தூவினால் நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பால் சாதம் ரெடி.