கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. அதேபோல தங்களது அந்தஸ்தை சிறப்பாக காட்டிக் கொள்ளும் வகையிலான அடையாளங்கள் இருக்கக் கூடாது, சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா மல்லாக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ சந்தி வீரன் திருக்கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் தை திருவிழாவை முன்னிட்டு கொடிவளவு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதையோ செய்யப்படாது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சசி பாண்டித்துரை என்பவர், அவருக்கு முதல் மரியாதை செய்யுமாறும் சிறப்பு மரியாதை செய்யுமாறும் கூறி வருகிறார். விழாவின் போது கையில் குடையை ஏந்தியவாறு அவரது அடியாட்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். இது ஏற்கத்தக்கதல்ல, ஆகவே மல்லாக்கோட்டை கிராமத்தில் நடைபெறும் தைப்பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, அவரது ஆட்களுடன் பரிவட்டம் கட்டி கையில் கோலுடன் கொடை பிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதோடு அவ்வாறு கலந்து கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்..

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிது அல்ல, ஏற்கனவே கடந்த ஆண்டுகளும் இதே போன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. கோவிலின் உள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலை பாகை கட்டுவதோ, குடைபிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும், சமமாக சமம் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். கோவிலுக்குள் அனைவரும் சமமானவர்களே என குறிப்பிட்ட நீதிபதி சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது என குறிப்பிட்டு விழாவை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இந்த வழக்கில் விசாரணை தொடங்கும் போதே இதுபோன்று வழக்குகள் அனைத்திற்கும் இதற்கு முன்பாக நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களையும், அறிவுறுத்தக்களையும் வழங்கி உள்ளது. ஆகவே அந்த உத்தரவுகள் இந்த வழக்கிற்கு மட்டுமல்ல, இது போல கோவில்களில் சிறப்பு மரியாதை செய்வது, குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை அரவே கூடாது. இதனை அந்தந்த கோவில் நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தை நீதிபதி  குறிப்பிட்டுள்ளார்.