கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளும் நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 2ம் தேதி காலை 10:30 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா/ விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா/ மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.

தற்போது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னையில் புயல்/ கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் இரண்டாம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.