முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் நேற்று முன்தினம் இரவு காலமானார். ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

தாயார் மறைவு செய்தி அறிந்த ஓ பன்னீர்செல்வம் உடனே சென்னையிலிருந்து பெரிய குளம் புறப்பட்டு சென்றார். பழனியம்மாளின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.