
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார் 59 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 5.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பர்கி தெரிவித்ததாவது, மே 26 அன்று காலை வங்கியை சுத்தம் செய்ய வந்த ஊழியர், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளார். உடனடியாக மேலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையின் போது வங்கி வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை கடனாக வைத்து இருந்த 59 கிலோ தங்கம் மாயமாகியுள்ளதும் தெரியவந்தது.
6 முதல் 8 பேர் கொண்ட கொள்ளையர் குழு, வங்கியின் உள்ளமைப்பு பற்றிய முழுமையான தகவலோடு செயல்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. தவறான சாவியை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு லாக்கரை திறந்துள்ளனர். மற்ற லாக்கர்கள் திறக்காமல் இருந்ததால், முன்னரே துல்லியமான ஆய்வு மேற்கொண்டிருப்பது தெளிவாகிறது. மேலும், ஒரு கருப்பு பொம்மையை உடைக்கப்பட்ட ஜன்னலருகே வைத்துள்ளனர் என்று போலீசார் கூறினர்.
மொத்தமாக அந்த வங்கியில் ரூ.53 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்ததாக வாடிக்கையாளர் சிவனகௌடா தெரிவித்தார். ஹெர்னால், ஹூப்பள்ளி போன்ற அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் பலர் தங்கள் நகைகளை இக்கிளையில் பத்திரமாக வைத்திருந்தனர். இது நாட்டிலேயே மிகப் பெரிய வங்கி கொள்ளைகளில் ஒன்றாக இருக்கக்கூடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது 8 விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய முடியும் என போலீஸ் உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.