
திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார்.
அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக பிரச்சனை நடந்து வந்துள்ளது. இதனால் காமராஜ் காவல் நிலையத்தில் 2 பேர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காமராஜ் அவருடைய நண்பரான ராஜா என்பவருடன் நாயுடு மங்கலம் ரயில்வே கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இந்த தகவல் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு காமராஜின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து காமராஜரின் கொலை தொடர்பாக அவரது சகோதரர் ஜெயப்பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மணிகண்டன், கருணாநிதி என்பது தெரியவந்தது. மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.