நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் குழந்தை திருமணம் அசாமில் மிகவும் அபாய நிலைமையில் உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த நாட்டில் நடைபெறும் குழந்தை திருமணம்  சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகின்ற நிலையில் அசாம் மாநிலத்தில் மட்டும் 12.7 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது.

இது அசாமில் அதிக திருமணங்கள், அதிக குழந்தை இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அறிக்கையை மையமாக வைத்து குழந்தை திருமணங்களை தடுக்க அசாம் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல் மந்திரி ஹமந்த விஸ்வா சர்மா  2026 ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணங்களை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் அசாம் அரசு கடந்த அமைச்சரவை கூட்டத்தில்  முக்கிய முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் 14 முதல் 18 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள்.

அதே போல் 14 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் குழந்தை திருமணங்களை ஒழிக்க அசாம் அரசு அதிரடியாக களமிறங்கி உள்ளது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த 2,258 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் குழந்தை திருமணங்களை செய்து வைத்த மக போதகர்களையும் கைது செய்துள்ளனர். இந்த குழந்தை திருமணம் தொடர்பாக 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே குழந்தை திருமணம் செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பெண்கள் சிலர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் முதல் மந்திரி குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களை தடுக்கும் ஐந்து ஆண்டு  நடவடிக்கைகளில் ஒரு பகுதி இதுவாகும். குழந்தை திருமணத்தை 2026 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க  அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் அனுதாபம் என்ற கேள்விக்கு இங்கு இடம் இல்லை. அசாமில் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.