சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு, திருட்டு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த வழக்கின் விசாரணையின் போது ஞானசேகரனை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று தண்டனை பற்றிய விவரங்களை அறிவிப்பதாக கூறியது. அதன்படி தற்போது ஞானசேகருக்கு தண்டனை வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஞானசேகருக்கு 30 வருடங்களுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எதிர்பார்த்த வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதுபோன்ற பாலியல் வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்பு பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.

முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் என்று கூறினார்.