அமெரிக்காவில் ஹார்வர்டு சட்ட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 1887-ஆம் ஆண்டு முதல், சட்டம் படிக்கும் மாணவர்களால் சட்டம் சார்ந்த தகவல்களை தரும்  பத்திரிகை ஒன்று தொடங்கப்பட்டது. இது உலக அளவில் அதிக வாசகர் வட்டங்களை பெற்று  விற்பனையிலும் முன்னணியில் உள்ளது. இதற்கு இந்திய அமெரிக்கரான அப்சரா ஐயர் என்பவர் 137-வது தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 136 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அமெரிக்கர் ஒருவர் இந்த பொறுப்புகளை ஏற்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் ஹார்வட்டு சட்ட பள்ளியின் அப்சரா (29) என்ற மாணவி 2018-ஆம் ஆண்டில் இருந்து கலை பொருட்கள் சார்ந்த குற்ற பிரிவில் புலனாய்வு மேற்கொள்வது மற்றும் அவற்றை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பது போன்ற பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மாணவி யேல் பல்கலை கழகத்தில் பொருளாதாரம் மற்றும் கணிதவியலில் பட்டப்படிப்பு முடித்து, ஸ்பானிஷ் மொழியில் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் தொல்லியல் துறையில் ஏற்பட்ட  ஆர்வத்தால், ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் எம்.பில் படிப்பை தொடர்ந்துள்ளார். மேலும் இவர் சர்வதேச மற்றும் மத்திய சட்ட அமலாக்க துறை அதிகாரிகளுடன் இணைந்து, 15 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 1,100-க்கும் மேற்பட்ட கொள்ளை போன கலை பொருட்களை அவற்றின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப கூடிய புலனாய்வு பணியில் ஒருங்கிணைந்து பணியாற்றி உள்ளார்.