அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி அதிமுகவில் நடைபெற இருக்கிறது. பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 20-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுவை 21-ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்தது சட்டவிரோதம் என்றும் தேர்தல் செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது. எனவே தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழு வழக்கை நாளை சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.